×

100க்கும் மேற்பட்ட படகுகளில் வந்து சின்னமுட்டம் துறைமுகத்தில் நெல்லை மீனவர்கள் முற்றுகை சின்னமுட்டம் துறைமுகத்தில் நெல்லை மீனவர்கள்

கன்னியாகுமரி, அக். 1: நெல்லை மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் வந்து சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தை முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கும், நெல்லை மாவட்டம் கூத்தங்குழி மீனவர்களுக்கும் கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.இந்தநிலையில் சின்னமுட்டம் மீனவர்கள், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து மீன்பிடிப்பதாக கூத்தங்குழி மீனவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக அவர்கள் சின்னமுட்டம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகாரும் தெரிவித்திருந்தனர். இந்த பிரச்னை தொடர்பாக கூத்தங்குழியில் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று சின்னமுட்டம் மீனவர்களை கடல் வழியாக வந்து முற்றுகையிட போவதாக நெல்லை கூத்தங்குழி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அறிவித்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சின்னமுட்டம் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சின்னமுட்டம் மீனவளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி நேற்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்ைல. விசைப்படகுகள் துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன், கன்னியாகுமரி சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் ஏராளமான போலீசார் சின்னமுட்டத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.இதனிடையே நெல்லை மாவட்டம் பெருமணல், கூத்தங்குழி, கூட்டப்புளி, இடிந்தகரை, உவரி ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் நேற்று காலை கடல் வழியாக சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தை நோக்கி வந்து கடலில் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் அவர்களை எச்சரித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் வந்த வள்ளங்களில் திரும்பி சென்றனர். இதையடுத்து பதற்றம் முடிவுக்கு வந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் குவிந்தனர். பின்னர் நிர்வாகிகள் துறைமுக வளாகத்தில் அவசர கூட்டம் நடத்தினர். அதில் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் வானவில் சகாயம், செயலாளர் ரெஜிஸ், மகிழ்ச்சிமாதா விசைப்படகு சங்கத்தலைவர் செல்வம், சின்னமுட்டம் விசைப்படகு உரிமையாளர் சங்கத்தலைவர் சில்வெஸ்டர், கன்னியாகுமரி பங்கு நிர்வாக துணைதலைவர் நாஞ்சில் மைக்கேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விசைப்படகு உரிமையாளர்கள் கூறும் போது, சின்னமுட்டம் மீன்பிடித்துறை முகத்தை தங்குதளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகிறோம். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டே மீன்பிடித்தொழில் செய்து வருகிறோம். எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கட்டுமரம் மீனவர்கள் எங்கள் படகுகளை அழிக்க வந்தனர். இது கண்டிக்க தக்கது. நாங்கள் பாதுகாப்பாக தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய விசைப்படகு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கலெக்டர் எஸ்பியை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Paddy fishermen ,port ,
× RELATED புதுச்சேரிக்கு மாற்றம் தேவை என்பதை...