கரூர், செப். 30: கரூர் நகராட்சிக்குட்பட்ட கொங்கு முத்து நகர்ப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் நகராட்சிக்குட்பட்ட 43வது வார்டு பகுதியில் கொங்கு முத்து நகர் உள்ளது. நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பு பகுதிகளுக்கு பட்டா கேட்டு போராடி வருகின்றனர். ஆனால், இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது. wமாவட்ட நிர்வாகம் முதல் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளிடமும் பட்டா கேட்டு போராடி வருகின்றனர். பட்டா கிடைக்காத காரணத்தினால் குடிநீர் வசதி உட்பட பல்வேறு வசதிகள் கிடைக்காமல் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஒரு சிலருக்கு மட்டுமே பட்டா உள்ள நிலையில், பெரும்பாலான குடும்பத்தினர் பட்டா கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. துறை அதிகாரிகள் மட்டுமின்றி பகுதிக்கு வந்த அரசியல்வாதிகளிடமும் இவர்களின் பிரச்னை குறித்து அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை மனு அளித்துள்ளனர். எனவே, பகுதி மக்களின் நலன் கருதி, விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டு கொங்கு முத்து நகரில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எதிர்பார்க்கப்படுகிறது.