சிவகாசி, செப். 30: சிவகாசி பஸ்நிலையத்தில் சிறுநீர் கழிவு மற்றும் குப்பை கழிவுகளால் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. சிவகாசி பஸ்நிலையம் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இந்த பஸ்நிலையம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது நகர் பகுதி விரிவடைந்துள்ளதால் பஸ்நிலையத்தில் போதிய இடவசி இல்லை. இதனால் பஸ்கள் பஸ்நிலையம் உள்ளே வந்து செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது. பயணிகளும் இட நெருக்கடியால் அவதிப்பட்டனர். காலை, மாலை நேரங்களில் பஸ்நிலையத்தில் கூட்டம் அதிகமாக உள்ளதால் சில சமயங்களில் விபத்துக்களும் ஏற்பட்டன. எனவே நகராட்சி நிர்வாகம் பஸ்நிலையம் அருகில் உள்ள ஒரு ஏக்கர் காலி இடத்தில் புதிய பஸ்நிலையம் அமைத்து விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொண்டது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இந்தபணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. ஆனால் பஸ்நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பஸ் நிலையத்தில் தென்கிழக்கு பகுதியில் திறந்த வெளியில் பயணிகள் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. புதிய பஸ்நிலைய விரிவாக்கத்திற்கு ஏற்கனவே பஸ்நிலைய முன்பகுதியில் உள்ள 16க்கும் மேற்பட்ட கடைகளை அற்றபட்டது. இதற்கு மாற்றாக கிழக்கு பகுதியில் 14க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த கடைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் செயல்பாடின்றி பாழடைந்து வருகிறது. இந்த பகுதியில் குப்பை கழிவுகள் தேங்கி சுகாதாரமின்றி உள்ளது. பஸ்நிலயைத்திற்குள் சரிவர சுகாதார பணிகள் செய்யப்படாததால் பஸ்நிலையம் வரும் பயணிகள் சுகாதார கேட்டால் கடும் அவதிப்படுகின்றனர். கொசுக்கள் அதிகளவில் உள்ளதால் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் கொசுக்கடியால் சிரமப்படுகின்றனர். பஸ் நிலைய பகுதி சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால் பயணிகளுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொண்டு நிறுவனத்தினர் பஸ் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டனர். அப்போது பஸ்நிலையம் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வந்தது. சிவகாசி பஸ் நிலையம் தமிழகத்திலேயே தூய்மையான பஸ் நிலையம் என சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது சிவகாசி பஸ்நிலையத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் சிவகாசி வரும் வெளியூர் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். சிவகாசி பஸ் நிலையத்தை சுகாதாரமாக பராமரிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.