திருமங்கலம், செப். 30: திருமங்கலம் நகராட்சியில், பாதாளச்சாக்கடை உள்ள பகுதிக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான அனைத்து கட்சி, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக நகரச்செயாளர் முருகன் தலைமை வகித்தார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். மதிமுக நகரசெயலாளர் அனிதா பால்ராஜ் வரவேற்றார்.கூட்டத்தில், ‘திருமங்கலம் நகராட்சி புதிதாக விதித்துள்ள பாதாளச்சாக்கடை வரி மற்றும் குப்பைக்கு வரி உள்ளிட்ட வரிவசூலை கண்டித்து அக்.9ம் தேதி ஒருநாள் கடையடைப்பு நடத்துவது, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது அல்லது தர்ணா போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இ.கம்யூ.,சார்பில் சந்தானம், சுப்புக்காளை, முத்துராம், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சந்திரசேகர், திமுக முன்னாள் கவுன்சிலர் ஜாகீர், மதிமுக அவைத்தலைவர் திருப்பதி, 20வது வார்டு இளைஞரணி ஜெய்லானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.