சோமனூர், செப். 30: கோவை சோமனூரை அடுத்த கணியூரில் மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து டிடிவி தினகரன் பேசியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் குழிதோண்டி புதைத்து விட்டனர். விரைவில் எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழும். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் நாளை காணாமல் போவதைப் போல ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோர் காணாமல் போய்விடுவார்கள்.
தமிழகத்தில் நடப்பது மாநில அரசாக இல்லை, மோடியின் அரசாக தலையாட்டி பொம்மைகளாக உள்ளனர். இதனால் அனைத்து துறைகளும் முடக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும், அதன் பிறகு மக்கள் விரும்யும் நல்ல அரசு மீண்டும் கொண்டு வருவோம். இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.