கெங்கவல்லி, செப்.26: தலைவாசல் ஒன்றியம், இலுப்பத்தம் ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 2 ஏக்கர் ஏரி நிலத்தை, தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பொக்லைன் மூலம் அகற்றினர். தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட இலுப்பநத்தம் ஊராட்சியில் வசிக்கும் பழனிசாமி, மதுரை, பிச்சைப்பிள்ளை, செல்வகுமார், மணிவேல் மற்றொரு பழனிசாமி ராஜ், முனியன் ஆகிய 8 பேர், கிராமத்தில் உள்ள ஏரி நிலம் 2 ஏக்கரை ஆக்கிரமித்து, கடந்த சில ஆண்டுகளாக கரும்பு, மக்காச்சோளம், மரவள்ளிகிழங்கு ஆகியவற்றை பயிரிட்டு வந்தனர். பொதுமக்களின் புகாரை அடுத்து, தலைவாசல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், கடந்த 2016ம் ஆண்டு இலுப்பந்தம் ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க கோரி, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில் நேற்று, கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்து, தலைவாசல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்வம், கிராம ஊராட்சி அலுவலர் வெங்கட்ரமணன், வீரகனூர் எஸ்ஐ தினேஷ்குமார், ஆர்ஐ சங்கரி ஆகியோர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார், அந்த கிராமத்துக்கு சென்று அங்கிருந்த ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றினர். அப்போது அங்கு வந்த விவசாயிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். ஏரி நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை முற்றிலுமாக அகற்றும் வரை, பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.