×

பரமத்திவேலூர் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பரமத்திவேலூர், செப்.26: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, பரமத்திவேலூரில் காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை முழுவதும் நிரம்பியுள்ள நிலையில், அணைக்கு வரும் 40 ஆயிரம் கனஅடி தண்ணீரும், காவிரியில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பரமத்திவேலூர் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்திவேலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆடு, மாடுகளை குளிப்பாட்டவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பரமத்தி தாசில்தார் செல்வராஜ் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், தண்டோரா போட்டு மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றங்கரையில் பல பகுதிகளில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, திருமணிமுத்தாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, செருக்கலை ஏரி நிரம்பி தண்ணீர் காவிரியை நோக்கி வந்து கொண்டுள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள மக்களும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Cauvery ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...