×

திருச்சி வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் விதைப்பண்ணை அமைக்க உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி

திருச்சி, செப்.26: விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் மூலம் அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை முலம் திருச்சி வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்தில் அரசு மற்றும் தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கு சான்று விதை உற்பத்தி பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்சி, வேளாண் இணை இயக்குநர் சந்தனாகிருஷ்ணன் தலைமை வகித்து, ‘நல்ல தரமான விதைகள் கிடைத்திட விதைப்பண்ணைகளை சான்று பெற்ற விதைகளை கொண்டு அமைத்திட வேண்டும். விதை என்பது விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஜீவநாடி ஆகும். எனவே தரமான விதைகளை உற்பத்தி செய்து காலத்தே விதைப்பு செய்ய வேண்டும்’ என்றார். வேளாண் துணை இயக்குநர் (மாநில திட்டம்) ராஜேஸ்வரன், சான்று பெற்ற விதையின் முக்கியத்துவம், விதைகளை சான்று பெறுவதின் அவசியம் குறித்து பேசினார். விதைச்சான்று உதவி இயக்குநர் அறிவழகன், ‘மாவட்டத்திற்கு தேவையான விதை, துறையின் மூலமும் மீதம் தனியார் துறை மற்றும் விவசாயிகளின் தம் சொந்த விதைகளின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

தரமான சான்று பெற்ற விதைகளை கொண்டு விதைப்பண்ணை அமைத்து அதிக இனத்தூய்மை மற்றும் நல்ல முளைப்பு திறன் உள்ள விதைகளை உற்பத்தி செய்து காலத்தே விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும். பிடி விதைக்கு புட்டி விதை பிந்தி என்ற பழமொழிக்கு ஏற்ப காலத்தே விதை விதைத்திட வேண்டும். தற்சமயம் விதைப்பண்ணை அமைக்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. எனவே அடுத்த ஆண்டின் இலக்கிற்கு எவ்வளவு ஆதார விதைகள் மற்றும் சான்று விதைகள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்றார் போல் விதைப்பண்ணை அமைத்து விதை சங்கிலி தொடர வேண்டும்’ என்றார். இப்பயிற்சியில் விதைப்பண்ணை பதிவு வயலாய்வு, விதைச்சுத்தி பணி, சான்றட்டைக்கட்டுதல் மற்றும் சிறப்பு அனுமதி போன்ற தலைப்புகளில் அனைத்து உதவி விதை அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் துணை இயக்குநர் செல்வம், உதவி இயக்குநர்கள் விநாயக மூர்த்தி, மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர். விதைச்சான்று அலுவலர்கள் கவிதா பிரிசில்லா, சோபனா, ரவிச்சந்திரன், வேல்முருகன் மற்றும் சபாபதி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இணைய வழி பயிற்சி

தமிழக அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இணைய வழி மூலம் சான்று விதை உற்பத்திக்கு தேவையான அனைத்து அலுவலக நடைமுறைகளையும் செயல்படுத்தி வருகிறது. எனவே இப்பயிற்சியில் இணைய வழி மூலமாக எவ்வாறு விதைப்பண்ணை பதிவு செய்தல், சுத்திபணிக்கு விதை கொண்டு செல்லுதல் மற்றும் சான்றட்டை பெறுவது போன்ற அலுவலக நடைமுறைகள் இணைய வழி மூலம் பயிற்சியளிக்கப்பட்டது.

விதைப்பண்ணைக்கு என்னென்ன பயிர்கள்?

நெல் பயிரில் நீண்ட கால மற்றும் குறுகிய கால ரகங்களான சாவித்திரி, சம்பா மசுரி, டி.கே.எம்.13, ஆடுதுறை 8, ஆடுதுறை 9, கோ.ஆர்.50, என்.எல்.ஆர்.34449, திருச்சி 3 ரகங்கள், சிறுதானிய பயிர்களான கம்பு, கேழ்வரகு, சோளம், பயறு உளுந்து, பச்சைப்பயறு மற்றும் துவரை பயிர்களில் அதிக விளைச்சல் தரக்கூடிய ரகங்களை தேர்வு செய்தும் மற்றும் அதிக லாபம் தரும் எண்ணெய் வித்துப்பயிர்களை தேர்வு செய்து விதைப்பண்ணை அமைக்க அறிவுறுத்தப்பட்டது.

Tags : producers ,office ,Trichy Agricultural Coordinator ,
× RELATED ₹3 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்