×

புள்ளலூர் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும்

காஞ்சிபுரம், செப்.26: புள்ளலூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என கலெக்டர் பொன்னையாவிடம், கிராம மக்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலூர் ஊராட்சியில் ஏரி உள்வாய், நீர்நிலை புறம்போக்குகள் சுமார் 200 ஏக்கருக்கு மேல் உள்ளன. இந்த இடம் படுநெல்லி, புள்ளலூர், மூலப்பட்டு, ரங்கநாதபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.மேலும் மேய்க்கால் நிலத்தை சுமார் 80 ஏக்கர் தண்டலம், பள்ளம்பாக்கம், புள்ளலூரை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.இந்த பகுதிகளில் நூறுநாள் வேலை செய்தால் ஆக்கிரமிப்பாளர்கள் தடைசெய்கிறார்கள். மேய்க்கால் நிலங்களில் ஆடு, மாடுகள் மேய்க்க அனுமதிக்காமல் விரட்டிவிடுகின்றனர்.

மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வெளியூர் ஆட்கள் இரவோடு இரவாக லாரிகளில் மணல் கொள்ளையடித்து செல்கின்றனர். புள்ளலூர் ஊராட்சியில் சிலரால், ஆக்கிமிக்கப்பட்டுள்ள மேய்க்கால், ஏரி உள்வாய் மற்றும் நீர்நிலை புறம்போக்கு நிலங்களை மீட்டு, அளவீடு செய்ய வேண்டும். அந்தப் பகுதிகளுக்கு வேலி அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது

Tags : lands ,village ,Pankalur ,
× RELATED 5 அடி பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்