×

வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால் பாலைவனமாக மாறிய உத்திரமேரூர் ஏரி

உத்திரமேரூர், செப்.26: வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பால், தண்ணீர் இல்லாமல் பாலைவனமாக உத்திரமேரூர் ஏரி காட்சியளிக்கிறது. இதனால், மழை பெய்தும் பலனில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
உத்திரமேரூரில் உள்ள வைரமேகன் தடாகம் என்றழைக்கப்படும் உத்திரமேரூர் ஏரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக பெரிய ஏரிகளில் ஒன்றாக உள்ளது. சுமார் 2719 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 8 மதகுகள் மூலம் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.ஏரியில் இருந்து வெளியேரும் உபரிநீரில் வேடபாளையம், காக்கநல்லூர், முருக்கேரி, நீரடி, புலியூர், குப்பையநல்லூர். காவனூர்புதுச்சேரி, காட்டுப்பாக்கம், பட்டஞ்சேரி, ஓங்கூர், நல்லூர் உட்பட 18க்கும் மேற்பட்ட கிராங்களில் உள்ள சுமார் 5462 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்ஏரி முழு கொள்ளளவை எட்டினால், விவசாயிகள் முப்போகம் பயிரிடுவர். இதில் பெரும்பாலும் நெல், கரும்பு, வேர்கடலை ஆகிய பயிர் வகைள் நிலத்தில் பயிரிடப்படும். விவசாயம் மட்டுமின்றி இந்த ஏரி உத்திரமேரூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளம், குட்டை என பல்வேறு நீர்நிலைகளுக்கு மிக முக்கிய நீராதரமாகவும் விளங்குகிறது.

மேலும், உத்திரமேரூர் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் முக்கிய குடிநீராதாரமாகவும் உள்ளது. இதுபோன்ற உத்திரமேரூர் ஏரியின் பெரும்பாலான நீர்வரத்து கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால், கால்வாய்களில் பெரும்பாலான இடங்கள் பிளாட்டுகள், கட்டிடங்கள் என பல வகைகளில் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் மழைநீர் ஏரிக்கு வந்து சேராமல் வீணாகிறது.எவ்வளவு மழை பெய்தாலும் இந்த ஏரிக்கு மட்டும் மழைநீர் வந்து சேர்வதில்லை. அனுமந்தண்டலம் கிராமத்திலிருந்து ஒரே கால்வாய் மட்டும் தற்போது உள்ளது. இந்த கால்வாயும் செய்யாற்றில் வெள்ளம் வந்தால் மட்டுமே ஆற்று நீர்வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் உத்திரமேரூர் ஏரி மட்டும் நீர்வரத்து இன்றி வறண்டு பாலைவனம் போல் காணப்படுகிறது.ஏரியில் நீர் வரத்து இல்லாமல் உள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பதோடு ஏரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் ஏரியினை பார்வையிட்டு ஆக்கிரமிப்புக்களை அகற்றி, கால்வாய்கள் சீரமைத்து வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : desert ,canal ,invasion ,
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...