×

ஆர்டி மலை ஊராட்சி மேலவாலியம்பட்டியில் சமூக தணிக்கை சிறப்பு கிராமசபை கூட்டம்

தோகைமலை, செப். 26: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்டிமலை ஊராட்சியில் 100 நாள் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பணிகள் மற்றும் பணியாளர்கள் செய்த பணிகள் குறித்து சமூகதணிக்கை இறுதிசெய்தல் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.
மேலவாலியம்பட்டி மந்தையில் உள்ள மரத்தடியில் நடந்த இக்கூட்டத்திற்கு மூத்தகுடிமகன் சீலாநாயக்கர் தலைமை வகித்தார். ஒன்றிய ஆணையர் கிராம வளர்ச்சி ராஜேந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 2018-19 ம் ஆண்டிற்கான 2வது அரையாண்டில் புத்தூர் ஊராட்சியில் 100 நாள் பணியாளர்களின் பணிவிபரங்கள், மொத்த செலவீனங்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தின் விபரங்கள் என சமூக தணிக்கையாளர்களை கொண்டு கடந்த வாரம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு அறிக்கைகளை கிராம சபையில் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் புதிய பணிகளில் மரக்கன்றுகள் நடுதல், குளங்கள், மற்றும் வாரிகளை தூர்வாரி மழைநீர் சேமிப்பு குழிகள் அமைத்தல், சாலைஓரம் பராமறிப்பு உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நீர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பேரணி மேலவாலியம்பட்டி மந்தை அருகே தொடங்கி தெருக்களின் வீதிகள் வழியாக சென்று மீண்டும் அதே இடத்திற்கு வந்தடைந்தது.பேரணியில் மக்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு, மழைநீரை சேமிப்பது, மரங்கள் நடுவது, காடுகள் அழிக்கப்படுவதை தடுத்தல் உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.ஒன்றிய பணிமேற்பார்வையாளர் முருகேசன், வட்டார வள அலுவலர் மஞ்சுளா, ஊராட்சி மன்ற செயலாளர் செந்தில்குமார் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Tags : gram sabha meeting ,hill town ,Ardi ,
× RELATED சமூகத் தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்