திருவில்லிபுத்தூர், செப். 25: திருவில்லிபுத்தூர் அருகே பி.ராமசந்திராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அழகு தெய்வேந்திரபுரம் வடக்குத் தெருவில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவில்லிபுத்தூர் அருகே உள்ள பி.ராமசந்திராபுரம் ஒன்றாவது வார்டில் உள்ள அழகு தெய்வேந்திரபுரம் வடக்குத் தெருவில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இப்பகுதியில் குடியிருப்புகள் உருவாகின. இத்தெருவிற்கு சிமெண்ட் தளம், வாறுகால், தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வசதி கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான அடிப்படை வசதியும் இதுநாள் வரை செய்து தரப்படவில்லை.
இந்நிலையில், நேற்று திருவில்லிபுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த தூறல் மழைக்கு, குளம் போல் நீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே, தெருவிற்கு பேவர் பிளாக் கற்கள் பதிக்கவும், கழிவுநீர் செல்ல வாறுகால் வசதியும், தெரு விளக்குகள் அமைக்கவும் மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் அமைத்து தண்ணீர் தொட்டி அமைத்திடவும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அழகு தெய்வேந்திரபுரம் வடக்குத் தெரு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.