திருவில்லிபுத்தூர், செப். 25: திருவில்லிபுத்தூர் நகரில் தொடர்ந்து 4 நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வளி அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் திருவில்லிபுத்தூர் நகரில் தொடர்ந்து நான்கு நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. திருவில்லிபுத்தூர் நகரில் பகல் வேளைகளில் வழக்கம் போல் வெயில் அடிக்கிறது. ஆனால் மாலை 4 மணி அளவில் சூழல் மாறி மழை பெய்வதற்காக கருமேகங்கள் உருமாறி மழை பெய்து வருகிறது.
கடந்த நான்கு தினங்களாக தொடர்ந்து 4 மணிக்கு மணிக்கு பெய்ய ஆரம்பிக்கும் மழை சுமார் ஒரு மணி நேரம் பரவலாக பெய்கிறது இதனால் காலையில் அடித்த வெயிலின் வெப்பம் குறைந்து, மாலையில் குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வத்திராயிருப்பு: இதேபோல் நேற்று மாலை வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் கனமழை பெய்தது. வத்திராயிருப்பு நகரிலும் தொடர்ந்து ஒருமணி நேரம் மழை பெய்ததால் சாலையில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. பல நாட்களுக்கு பின்பு வத்திராயிருப்பு பகுதியில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.