கரூர், செப். 25: கரூர் வெண்ணெய்மலையில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பெண்களுக்கான சேவை மற்றும் பாதுகாப்பு மையத்தினை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பெண்கள் தனிப்பட்ட இடத்திலோ, பொதுஇடத்திலோ, வன்முறையால் பாதிக்கப்பட்டால் சட்ட ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தேவைப்படும் ஆலோசனைகளை அவசரகால தேவை அடிப்படையில் எளிதாக பெற வழிவகை செய்வது இத்திட்டத்தின் நோக்கம்.இந்த மையத்தின் மூலம் பெண்களின் பாதுகாப்பிற்கான அவசர சேவை மற்றும் ஆலோசனைகள், புகார் அளிக்கும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ வசதி, சட்ட உதவிகள், மனநல ஆலோசனைகள், தற்காலிகமாக தங்கும் வசதிகள், செய்து கொடுக்கப்படும்.
தற்போது கரூர் வெண்ணெய்மலையில் அன்புக் கரங்கள் இல்லத்தில் இந்த மையம் இயங்கி வருகிறது.
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து 181 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள பொறுப்பு அலுவலரிடம் அந்த புகார் தெரிவிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பெண்கள் இந்த வாய்ப்பினை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இந்த மையத்தின் மூலம் இதுவரை பெறப்பட்டபுகார்களின் அடிப்படையில் 32 பெண்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.மாவட்டசமூக நல அலுவலர் ரவிபாலா, மண்மங்கலம் தாசில்தார் செந்தில், நிர்வாகி சேகர், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.