×

சிறுமியை கடத்த முயன்றவர் கைது

திருவொற்றியூர்: மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, அதே பகுதியில் 5ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த வழியாக பைக்கில் வந்த நபர், சிறுமியிடம் தந்தை அழைப்பதாக கூறி நைசாக பேசி அவளை பைக்கில் அமர வைத்துக் கொண்டு வேகமாகச் சென்றார். தெரியாத வழியில் அவர் சென்றதால், சந்தேகமடைந்த சிறுமி பைக்கை நிறுத்தம்படி கூறினார். ஆனால், நிறுத்தாததால் சிறுமி அலறினாள். இதைப் பார்த்த அந்த நபர் சிறுமியை அவசர அவசரமாக இறக்கி விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

உடனே சிறுமி வீட்டிற்கு வந்து நடந்த விவரங்களை குடும்பத்தினரிடம் தெரிவித்தாள். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் இதுகுறித்து மாதவரம் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார். அப்போது பைக்கில் சிறுமியை கடத்திச் சென்றவரின் உருவம் பதிவாகி இருந்தது. விசாரணையில் அது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முரளி (52) என்பதும், இவர் ஆலந்தூர் குடிநீர் வழங்கல் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்ததும், அங்கு  திருட்டு வழக்கில் தொடர்புடையதால் இவரை வேலை விட்டு நிறுத்தப்பட்டதும் தெரியவந்தது. தற்போது சிறுமியை கடத்தி, பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்தனர்.


Tags : kidnapping girl ,
× RELATED ஆட்டையாம்பட்டியில் சிறுமியை கடத்தி திருமணம் தொழிலாளி போக்சோவில் கைது