×

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணத்திற்கு அரசின் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

திருவாரூர் ,செப். 24: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள விரும்புவர்கள் அரசின் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இத்திட்டத்தில் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயாசமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணமானது இந்த மாதம் முதல் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரையில் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும். இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள், மற்றும் விண்ணப்பபடிவம் ஆகியன www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் காணலாம். மேலும் விண்ணப்பபடிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம் என்பதுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் என்று பெயர் குறிப்பிடப்பபட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், கலசமகால் பாரம்பரியக் கட்டிடம் முதல்தளம், சேப்பாக்கம், சென்னை- 5 -என்ற முகவரிக்கு வரும் 30ம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.



Tags : Christians ,pilgrimage ,
× RELATED ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்