தூத்துக்குடி, செப். 24: தூத்துக்குடி மாவட்டத்தில் 8 ஒப்பந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கிய பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கண்டித்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது என்ற பெயரில் பிஎஸ்என்எல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களில் 50% ஊழியர்களை குறைப்பது என்ற புதுடில்லி கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவிற்கிணங்க தூத்துக்குடி மாவட்டத்தில் 8 ஒப்பந்த ஊழியர்களை பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 43 ஊழியர்களின் பணி நேரத்தை பாதியாக குறைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதை கண்டித்து தூத்துக்குடியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட முதன்மை தொலைத்தொடர்பு பொது மேலாளர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஜெயமுருகன் தலைமை வகித்தார்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஒப்பந்த ஊழியர் சங்க மாநில உதவி செயலாளர் முனியராஜ் நன்றி கூறினார்.