தூத்துக்குடி, செப். 24: கிராமப்புறமக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் மேம்பட ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு சிலுக்கன்பட்டி அருகேயுள்ள மடத்துப்பட்டி மற்றும் சண்முகபுரம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு கொடுத்தனர். மனு விவரம்: எங்கள் கிராமத்தில் ஏராளமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்பட்டு வந்த நேரத்தில் எங்களுக்கும், எங்களைப்போன்ற பல்வேறு கிராமமக்களுக்கும் தேவையான மருத்துவ வசதி, கல்வி உதவித்தொகை, குடிநீர், சுகாதார தேவைகள் போன்றவை கிடைத்து வந்ததுடன், மரம் நடுதல், பள்ளி கட்டிடம் கட்டுதல் போன்ற பல்வேறு வகையான சமூகப்பணிகளும் தடையின்றி நடைபெற்று வந்தது. இதுபோன்று கிராமமக்களுக்கான வேலைவாய்ப்புகளும் சரியான முறையில் கிடைத்து வந்தது.
தற்போது ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் கிராமமக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவைகள் கிடைப்பதில் தடைகளும், தடங்கல்களும் ஏற்பட்டு மக்களும், மாணவ, மாணவியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்று வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தடையின்றி கிடைக்கவும், வேலைவாய்ப்பின் மூலமாக வாழ்வாதாரம் மேம்படவும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.