×

பேராவூரணி அருகே ஆக்கிரமிப்பில் ஆத்தாகுளம் ஏரி கையகப்படுத்தி தூர்வார வேண்டும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பேராவூரணி, செப்.24: பேராவூரணி அருகே உள்ள மாவடுகுறிச்சி ஊராட்சி ஆத்தாகுளம் ஏரியை ஆக்கிரமிப்பின் பிடியிலிருந்து மீட்டு தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோயில் தொடங்கி, பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு பின்புறம் முதல், மாவடுகுறிச்சி ஊராட்சி தென்னங்குடி கீழக்காடு வரை விரிந்து பரந்து சுமார் 113 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆத்தாகுளம் இன்று ஆக்கிரமிக்கப்பட்டு மண்மேடிட்டு, திடலாக மாறி, தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. ஆத்தாளூர், தென்னங்குடி கீழக்காடு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசனத்திற்கு முக்கிய நீராதாரமாகவும், கால்நடைகள் தாகம் தீர்க்கவும், விவசாய மற்றும் குடிநீர் ஆழ்துளைக் கிணறுகளுக்கு நீர்மட்டம் உயர்வும், பொது மக்களுக்கு குளிப்பது, துவைப்பது என பலவகையிலும் பயன்பட்டு வந்த ஆத்தாகுளம் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வறண்டு போய் உள்ளது. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ஒரு சில இடங்களில், சிலர் மண்ணை அனுமதி இன்றி அள்ளி வருகின்றனர். இதனால் பெரும் பள்ளமாக சில இடங்களில் உள்ளது.

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால், மண்மேடிட்டு கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது. மேலும் கொன்றைக்காடு காவிரி கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் வரும், துருசு, ஷட்டர் பராமரிப்பு இன்றி, பழுதடைந்த நிலையில் உள்ளதால் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. மேலும் வரத்து வாரிகள் தூர்வாராப்படாமல், புல்,புதர் மண்டிக் கிடப்பதாலும், கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்கள் விழுந்து கிடப்பதாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும், ஏரிக்கு தண்ணீர் வரும் வழி அடைபட்டு உள்ளது. இதனால் கடல்போல் தண்ணீர் தேங்கிக் கிடந்த ஆத்தாகுளம் ஏரி விளையாட்டு திடல் போல மாறி விட்டது. இதேபோல இந்த ஏரி நிறைந்தால், தண்ணீர் வெளியேறி அருகே உள்ள செல்வவிநாயகர்புரம் காட்டாற்றில் சென்று கலக்கும். தற்போது வரத்து வாரிகள் அடைபட்டு, தண்ணீர் வெளியேறும் பாதையும் அடைபட்டுக் கிடக்கிறது. இதனால் வெள்ளக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயம் ஏற்படலாம். புதிதாக நீராதாரத்தை பொதுப்பணிதுறை அதிகாரிகள் உருவாக்கா விட்டாலும், இருக்கும் நீராதாரத்தையாவது காப்பாற்ற வேண்டும். குடிமராமத்து பணியில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை ஆத்தாகுளத்தை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Tags : acquisition ,Athakulam Lake ,Peravurani ,
× RELATED பேராவூரணி வாக்குச்சாவடி மையங்களில்