விழுப்புரம், செப். 24: கம்பு, தினை விலை வீழ்ச்சியடைந்ததை கண்டித்து விழுப்புரத்தில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரத்தில் செயல்பட்டுவரும் மார்க்கெட் கமிட்டியில் தினசரி நெல், மணிலா, பருத்தி, உளுந்து, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். இதனிடையே தற்போது கம்பு, தினை சாகுபடி அதிகமாக இருந்ததால் மார்க்கெட் கமிட்டிகளில் குவிகிறது. இதனிடையே நேற்று விழுப்புரம் சுற்றுவட்டார பகுதியான பெரும்பாக்கம், காணை, கப்பூர், கோலியனூர், வாணியம்பாளையம், ஆயந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட கம்பு மூட்டைகள் குவிந்தன. இதனிடையே வழக்கமான விலையை விட நேற்று ஒரு மூட்டை ரூ.1,300 முதல் ரூ.1,500 என வீழ்ச்சியடைந்தது. அதே போல் தினைக்கான விலையும் வீழ்ச்சியடைந்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.விழுப்புரம் _ புதுவை சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுந்து நின்றன.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்தவாரம் கம்பு மூட்டைக்கு ரூ.2,500 வரை விற்பனையானது. ஆனால் இன்று ரூ.1000 குறைத்து விலைபோகிறது. வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளிடமிருந்து கம்பு கொள்முதல்செய்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 3 மூட்டை கம்பு வருவதே அதிகம். அதற்கு ரூ.8 ஆயிரம் வரை செலவாகிறது. செலவு செய்த தொகையில் பாதிகூடஎங்களுக்கு கிடைப்பதில்லை. நியாயமான விலைகிடைக்காததால் மறியலில் ஈடுபட்டோம். மேலும் ஒரு மூட்டைகம்புக்கு கூட பணம் கொடுக்க வங்கி புத்தகம் கொடுங்கள், ஆவணங்கள் கொடுங்கள் என்று அலைக்கழிப்பு செய்கின்றனர். கம்புக்கான விலையை நியாயமாகவும், உடனடியாக பணம்பட்டுவாடா செய்ய மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினர்.தகவல்அறிந்த விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் பேசி தீர்க்க வேண்டும், மறியலில் ஈடுபடக்கூடாது. போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என கூறினர். இதனைத்தொடர்ந்து கமிட்டிக்குள் சென்ற விவசாயிகள் அதிகாரிகளை கண்டித்துகோஷமிட்டு பின் கலைந்துசென்றனர். இதனால் நேருஜி சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.