×

மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

வேப்பூர், செப். 24: கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் திருச்சி- சென்னை, சேலம்-  கடலூர் செல்லும் முக்கிய இணைப்பு சாலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தற்போது பருவ மழை பெய்து வருவதால் மழைநீர் கழிவுநீரில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. அதில் உற்பத்தியாகும் கொசுக்களால் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைதுறைக்கும், நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கும் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் கழிவுநீரை அகற்றி வடிகால் வாய்க்கால் அமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக்குழு உறுப்பினர் நல்லூர் சாமிதுரை தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அசோகன் கண்டன உரையாற்றினார். இதில் வட்டக்குழு சிவஞானம், கிளை செயலாளர்கள் முத்துசாமி, சம்பத், தூண்டிக்காரன், வீரமணி, பாண்டியன், சோமு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கிடையில் வேப்பூர் வருவாய் ஆய்வாளர், வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன், தனிப்பிரிவு ஏட்டு இளையபெருமாள், நல்லூர் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி ஆகியோர் வந்து கழிவுநீரை அகற்றி வடிகால் வாய்க்கால் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Marxist Comm ,Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்