அருர், செப்.20: அரூரில் ₹2.34 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய தாலுகா அலுவலகத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி, அரூரில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரூரில் புதிய தாலுகா அலுவலகம் கட்ட ₹234.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. 12,702 சதுரடியில் கட்டப்பட்ட தாலுகா அலுவலகத்தின் தரைத்தளத்தில் தாலுகா அலுவலக பிரதான அறையும், கணிணி அறை, பதிவறை, அலுவலர் கழிவறை, மாற்றுத்திறனாளிகள் கழிவறை மற்றும் பொது கழிவறையும் கட்டப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் வட்ட வழங்கல் அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலகம், கூட்ட அறை, பதிவறையும் கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழாவில், அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், அரூர் ஆர்டிஓ புண்ணியகோட்டி, அரசு வழக்கறிஞர் பசுபதி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தியாகராஜன், செல்வகுமார், கூட்டுறவு சங்கத்தலைவர் மதிவாணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகன், உதவி பொறியாளர்கள் கோபிநாத், சரோஜா தேவி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.