×

சட்டப்பேரவையின் மனுக்கள் குழு சென்னை மாவட்டத்தில் விரைவில் கூடுகிறது: குறைகள், பிரச்னை குறித்து மனு அனுப்ப அக்.18 கடைசி நாள்


சென்னை: சட்டப்பேரவையின் மனுக்கள் குழு சென்னை மாவட்டத்தில் விரைவில் கூடுகிறது. இதில் குறைகள், பிரச்னை குறித்து மனுக்களை அனுப்ப அக்டோர் 18ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2018-20ம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழு சென்னை மாவட்டத்தில் விரைவில் கூடுவது என முடிவு செய்துள்ளது. இதையொட்டி சென்னை மாவட்டத்தில் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள், குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர், மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு, “தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை-9” என்ற முகவரிக்கு அக்டோர் 18ம் தேதிக்குள் அனுப்பலாம்.

மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த ெபாருள் ஒன்றினை  உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். மனுவில், “தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல்” போன்றவைகளாக இருத்தல் கூடாது. சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்கு உட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். மனுதாரர் முன்னிலையில் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்து உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.

இதுகுறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக வழங்கப்படும். அக்டோர் 18ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Panel ,lawyers ,Chennai ,
× RELATED நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம்