×

தீபாவளி பண்டிகை விற்பனை துவக்கம் தூத்துக்குடி மாவட்ட கோ-ஆப்டெக்சில் ரூ.3.15 கோடிக்கு இலக்கு நிர்ணயம்

தூத்துக்குடி, செப்.20:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.3.15 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.தூத்துக்குடி வ.உ.சி. கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் சந்தீப்நந்தூரி தொடங்கி வைத்தார். முதல் விற்பனையை தூத்துக்குடி ரங்கநாதபுரம் சி.எம்.பள்ளிகள் தாளாளர் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் பெற்றுக் கொண்டார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது,தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் 30 சதவீத தள்ளுபடியில் பல்வேறு விதமான ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மாவட்டத்தில் கடந்தாண்டு  தீபாவளி பண்டிகை காலத்தில் 2 விற்பனை நிலையங்களில் ரூ.2.79 கோடிக்கு விற்பனை நடந்தது. இந்தாண்டு தீபாவளிக்கு ரூ.3.15 கோடிக்கு விற்பனை குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி வஉசி கோ-ஆப்டெக்ஸ்க்கு ரூ.2.20 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மங்கையர் விரும்பும் மென்பட்டுச் சேலைகள், சுபமுகூர்த்த திருமண பட்டு சேலைகள், ஆர்கானிக் சேலைகள், பருத்தி சேலைகள், காட்டன் சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், வேட்டிகள், கைலிகள் ஆகியவை நவீன டிசைன்களில் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ்  மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இந்தாண்டில் தீபாவளிக்கு புதிய வரவாக மதுரை காட்டன் சேலைகள், காதா சேலைகள், காதா பெட்சீட் ரகங்கள், சம்பரே பெட்சீட் ரகங்கள் மற்றும் பாலிவிஸ்கோஸ் சூட்டிங் ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. மேலும், பிளாஸ்டிக் மாற்றாக துணியினால் செய்யப்பட்ட பர்ஸ்சுடன் கூடிய கேன்ட் பேக், காட்டன் பேக் உள்ளிட்ட புதிய ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸில் உள்ள புதிய ரகங்களை பார்வையிட்டு அதிகளவில் வாங்க முன்வர வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் இசக்கிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தூத்துக்குடி வ.உ.சி. கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் கணபதி சுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Target ,Tuticorin District Co-Apex ,
× RELATED இந்தியாவிற்காக விளையாடுவதே எனது...