×

பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செப்.26ல் நவராத்திரி பவனி தொடக்கம் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

நாகர்கோவில், செப்.20: நவராத்திரியை முன்னிட்டு திருவனந்தபுரத்திற்கு குமரி மாவட்டத்தில் இருந்து சுவாமி விக்ரகங்கள் பவனியாக எடுத்து செல்லப்படுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.நவராத்திரி பூஜைகள் செப்டம்பர் 29ம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம், வேளிமலை குமாரகோயிலில் இருந்து தேவசேனாதிபதி முருகன் விக்ரகம் வரும் 25ம் தேதி எழுந்தருளி பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவியுடன் திருவனந்தபுரத்திற்கு 26ம் தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து பவனியாக புறப்படுகின்றனர். பத்மநாபபுரம் அரண்மனையில் 26ம் தேதி காலையில் உடைவாள் கைமாற்ற சடங்கு நிகழ்வு நடைபெற உள்ளது. அன்று மாலை குழித்துறை மகாதேவர் கோவிலில் தங்குகின்ற சுவாமி விக்ரங்கள், மறுநாள் 27ம் தேதி காலை 11 மணிக்கு குமரி - கேரள எல்லையான களியக்காவிளை சென்றடைகின்றன. அங்கு கேரள மாநில அரசால் வரவேற்பு அளிக்கப்படுகிறது. செப்டம்பர் 28ம் தேதி காலை திருவனந்தபுரத்திற்கு பயணம் தொடங்கும். அன்று மாலை கரமனையை சென்றடைகின்ற சுவாமி விக்ரங்களுக்கு திருவனந்தபுரம் அரண்மனை பிரதிநிதி வருகை தந்து வரவேற்று பத்மநாபசுவாமி கோயிலுக்கு அழைத்து செல்வார். பின்னர் தேவி, தேவன்கள் நவராத்திரி பூஜைகளுக்காக பிரிந்து செல்வர். சரஸ்வதி தேவியை கோட்டைக்ககம் பகடசாலை மண்டபத்திலும், முன்னுதித்த நங்கை அம்மனை செந்திட்டை பகவதி கோயிலிலும், முருக கடவுளை ஆரியசாலை பகவதி கோயிலிலும் வைக்கப்பட்டு 9 நாட்கள் நவராத்திரி பூஜைகள் நடைபெறும். அக்டோபர் 8ம் தேதி பூஜைப்புரை மண்டத்தில் வேட்டைக்கு எழுந்தருள செய்தல் நடைபெறும். நவராத்திரி பூஜைகள் நிறைவு பெற்று ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் சுவாமி விக்ரங்கள் மீண்டும் அக்டோபர் 10ம் தேதி புறப்பட்டு 12ம் தேதி குமரி மாவட்டம் கொண்டுவரப்படும்.

நவராத்திரி ஊர்வலத்திற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே, மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, மாவட்ட எஸ்.பி  நாத், சப் கலெக்டர்கள் விஷ்ணு சந்திரன், சரண்யா அறி, ஏஎஸ்பிகள் ஜவஹர், கார்த்திக், விஷ்வேஸ் சாஸ்திரி, ஏடிஎஸ்பி விஜயபாஸ்கரன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஊர்வலம் செல்கின்ற பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா நடைபெறுகின்ற பத்மாநாபுரம் அரண்மனையில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.




Tags : Collector ,Navratri Bhavani ,Padmanabhapuram Palace ,Thiruvananthapuram ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...