அறந்தாங்கி,செப்.20: அறந்தாங்கி அருகே பொதுப்பாதையை தனிநபர் ஒருவர் அடைத்தை கண்டித்து கருவேல முல்லை வெட்டி போட்டு சாலையை பொதுமக்கள் அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அறந்தாங்கியை அடுத்த ஏகப்பெருமாளுர் ஊராட்சி திருவங்கூர் கிராமத்திற்கு ஏகனிவயல் வழியாக செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்வதற்கு சமீபத்தில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டும்போது, ஏகனிவயலை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் பாலம் கட்டும் பகுதியில் தனக்கு சொந்தமான இடம் வருவதாக கூறிவந்தார்.
இந்நிலையில் பாலம் கட்டும் பணி நிறைவடைந்த நிலையில், ஆரோக்கியசாமி கடந்த சில நாட்களாக திருவங்கூர் பகுதி மக்கள் செல்வதற்காக பாலம் கட்டப்பட்ட சாலையில் கருவேல முட்களை கொண்டு அடைத்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் உள்ளாட்சி மற்றும் வருவாய்த்துறையினரிடம் தெரிவித்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் ஆரோக்கியசாமி செவிசாய்க்கவில்லை.இந்நிலையில் திருவங்கூர் பகுதி மக்கள் நேற்று ஏகனிவயல் பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் சாலையில் சீமைக்கருவேலமரங்களை வெட்டி சாலையில் யாரும் செல்லமுடியாத அளவிற்கு அடைத்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், நாகுடி சப் இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் வருவாய்த் துறையினர், உள்ளாட்சி துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அறந்தாங்கி அருகே பொதுபாதையை தனிநபர் அடைத்ததால், பொதுமக்கள் சாலையை அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.