நெய்வேலி, செப். 20: குறிஞ்சிப்பாடி ஒன்றியம் காயல்பட்டு ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் வசதிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
ஆனால் இந்த மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள், மகளிர் சுகாதார வளாகத்தை திறக்க ஊராட்சி செயலாளரிடம் புகார் கூறியும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். மேலும் இந்த சுகாதார வளாகம் எதிரே செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி விஷ ஜந்துக்களின் புகலிடமாக மாறி உள்ளது. எனவே, காயல்பட்டு சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.