திருப்பூர், செப் 19: இந்தி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக வடக்கு மாவட்ட, மாணவர் அணி சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தமிழக மாணவர்களின் நலனில் அக்கரையில்லாமல் 5 மற்றும் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்த தமிழக அரசை கண்டித்தும், நாடு முழுவதும் இந்தி மொழி திணிக்கப்படுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாநகர செயலாளர் டி.கே.டி நாகராஜன் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநகர மாணவர் அணி அமைப்பாளர் திருநாவுகரசு, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ராம்குமார், கார்த்திக், மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் நந்தகுமார், சக்திவேல், ராமசாமி, கார்த்தி, பகுதி பொருப்பாளர்கள் ஐய்யப்பன், உசேன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், துணை அமைப்பாளர் ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.