×

துறையூர் அருகே கல்லூரி மாணவிகளை ஏற்றிச்சென்ற வேன் சாலையோரம் கவிழ்ந்தது 20 மாணவிகள் காயம்

துறையூர், செப்.19:  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த புத்தனாம்பட்டியில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில் வந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது வாடகைக்கு வேன் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மகிளம்பாடி, ரெட்டிமாங்குடி, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், தொட்டிபட்டி, தேனூர், பெரகம்பி ஆகிய பகுதியில் இருந்து பி.காம் மற்றும் பிஎஸ்சி படிக்கும் மாணவிகள் 28 பேரை ஏற்றிக் கொண்டு வாடகை வேன் தேனூர் வழியாக புத்தனாம்பட்டி காப்புக்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக டிரைவர் வேனை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 மாணவிகள் காயமடைந்தனர். இதனைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்ததன்பேரில் ஆம்புலன்ஸ் வந்தது. இதில் காயமடைந்த மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஓமாந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மாணவிகள் திவ்யா (19), வினிதா (20), பிரியா (19), கவுசல்யா (19) உள்பட 10 பேர் துறையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற மாணவிகள் துறையூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதுகுறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thuraiyur ,college road ,
× RELATED தஞ்சையில் பயங்கரம்; 1,000 ரூபாய்க்காக...