கிருஷ்ணகிரி, செப்.19: கிருஷ்ணகிரியில் இந்திய தந்தி சட்ட நகலை எரிக்க முயற்சி செய்த 28 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில், விவசாயிகளின் நில உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் 1985ம் ஆண்டு தந்தி சட்டத்தை கைவிடக்கோரி, இந்திய தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டம் ேநற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தின் போது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் தந்தி சட்டத்தை கைவிட்டு, விவசாயிகளின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும். ஏற்கனவே செயல்படும் மின் கோபுரத்திற்கும், கம்பி செல்லும் பாதைக்கும் மாத வாடகையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். புதியதாக செயல்படுத்தும் திட்டங்களை கேபிள் மூலமாக செயல்படுத்த வேண்டும். விவசாயிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
அதை தொடர்ந்து, இந்திய தந்தி சட்ட நகலை எரிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரையும் கைது செய்து, ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.