கும்பகோணம், செப். 19: சுவாமிமலையில் பெய்த பலத்த மழையால் 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் முறிந்து விழுந்தது. கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், இரவில் பலத்த மழையும் பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருதால் ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதேபோல் வயல்கள், தோட்டங்களில் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுவாமிமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது சுவாமிமலை- திருவலஞ்சுழி செல்லும் பிரதான சாலையில் 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேருடன் முறிந்து வயல் பகுதியில் விழுந்தது. சுவாமிமலையில் உள்ள முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இச்சாலையில் தான் சென்று வருகின்றனர். இரவு நேரத்தில் மரம் முறிந்து வயல் பகுதியில் விழுந்ததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதேபோல் தஞ்சை- கும்பகோணம் சாலை, சுந்தரபெருமாள்கோயில், உத்தாணி, பசுபதிகோயில் உள்ளிட்ட சாலைகள் முழுவதும் சேதமடைந்து சாலையோரம் உள்ள பெரும்பாலான மரங்கள் விழும் அபாயத்தில் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினரிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். தஞ்சை- கும்பகோணம் சாலையில் மரங்கள் விழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படுவதுடன் போக்குவரத்து பாதிக்கும். எனவே தஞ்சை- கும்பகோணம் சாலையோரம் விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டுமென வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.