கும்மிடிப்பூண்டி, செப். 19: கும்மிடிப்பூண்டி அடுத்த சேலியம்பேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீ மங்காவரத்தான் 53 அடி கொண்ட பத்ரகாளி அம்மன் கோயிலில் 6ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கடந்த 13ம் தேதி தீ மிதிக்கும் பக்தர்கள், காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். 14ம் தேதி பால் குடம் எடுத்தல், அம்மன் கரகம் ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் வீடுகளில் கூழ் வார்த்தல், அம்மன் சன்னதியில் பொங்கல் வைத்தல், வேப்பஞ்சேலை அணிவித்தும், காப்பு கட்டிய 112 பக்தர்கள் வேப்பிலை அணிந்து நாவேல் தரித்து ஆலயத்தை வலம் வந்தனர். பின்னர் பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர். இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர். இரவு ஸ்ரீ மங்காவரத்தான் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.