சென்னை: பேனர் விழுந்து உயிரிழந்த சுபயின் வீட்டிற்கு நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் இதுவரை பேனர் விழுந்து 34 பேர் இறந்துள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் காதில் வாங்குவதில்லை. அரசு அதிகாரிகள் முறைப்படி நடவடிக்கை எடுக்காததால் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்தும், இதுவரை தேடி வருவதாக போலீசார் கூறி வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எந்த விழாவிற்கும் பேனர்கள் வைப்பதில்லை. இந்த சம்பவத்திற்கு பிறகு போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் எந்த பேனரும் வைக்கக் கூடாது என கட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இந்த குடும்பத்திற்க்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.