×

மாநகராட்சி குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் கிலோ 20க்கு விற்பனை

* டோர் டெலிவரியும் உண்டு * ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை: மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் பொதுமக்களுக்கு  கிலோ 20க்கு விற்பனை செய்யப்படும் என்று  ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சுமார் 4930 மெட்ரிக் டன் அளவிலான குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் தனியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் தகுந்த மறுசுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது.மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள் மற்றும் 175 சிறு தொட்டிகள், 1711 உறை கிணறு மையங்கள், 21 புதைகுழி மையங்கள், மற்றும் 2 வெர்மி உர மையங்கள் ஆகியவற்றின் மூலம் மக்கும் குப்பைகளில் இருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சேகரமாகும் மொத்த குப்பையில் இருந்து சுமார் 400 மெட்ரிக் டன் அளவிலான மக்கும் குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு அவற்றில் இருந்து தரமான உரம் தயாரிக்கப்படுகிறது.

மாநகராட்சியில் சார்பில் இதுவரை சுமார் 160 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம் பொதுமக்களுக்கு மலிவு விலையிலும் மாநகராட்சி பூங்காக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து மாநகராட்சி வசம் சுமார் 190 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம் கையிருப்பு உள்ளது. இந்த  உரங்கள் நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் மற்றும் சென்னை டெஸ்டிங்க் லேபோரேட்டரி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் பயன்படுத்துவதற்கு உகந்தவை என தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பொதுமக்களின் நலன் கருதி கையிருப்பு உள்ள இயற்கை உரத்தை கிலோ 20க்கு விற்பனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.  உரங்களை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய ஏதுவாக சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகம் சார்பாக 9445194802 என்ற அலைபேசி எண்ணில் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த எண்ணிற்கு  தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்-அப் மூலம் தங்களுக்கு தேவையான உரத்தின் அளவை குறிப்பிட்டு முழு முகவரியை வழங்கினால் நேரடியாக வீடுகளுக்கு சென்னை மாநகராட்சி மூலம் கொண்டு வந்து வழங்கப்படும். மேலும் உரத்திற்கான பணம் வீடு தேடி வந்து உரத்தை வழங்கும்போது பெற்றுக்கொள்ளப்படும்  என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.


Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...