தர்மபுரி, செப்.17: படித்து வேலையில்லாத சிறுபான்மையின இளைஞர்களுக்கு, இலவச திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான நேர்காணல் காஞ்சிபுரத்தில் வரும் 20ம்தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகத்தின் நிதி உதவியுடன், ஹாசல் சி குஷால்தா என்ற திட்டத்தின் கீழ், படித்து வேலையில்லாத சிறுபான்மையின இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையத்தில், இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஸ்டிச்சர் கூட்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் மற்றும் பிரி அசம்பிளி ஆபரேட்டர் ஆகிய பயிற்சிகள் 46 நாட்கள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பயிற்சிக்கும், தலா 20 நபர்கள் வீதம் மொத்தம் 40 பேருக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சார்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு மிகாமலும், 18 முதல் 55 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். பயிற்சியின் போது பயனாளிக்கு 1,534 உதவித்தொகையாக அளிக்கப்படும். உண்டு, உறைவிடக் கட்டணம் வழங்கப்படாது. இதற்கான நேர்காணல், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், எண் 64சி, சாலை தெரு, புதேரி, குஜராத் சத்திரம் அருகில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் (சிஎப்டிஐ) வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. பயிற்சி பெற விரும்புவோர் அசல் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மத்திய காலணி பயிற்சி நிலையம் (சிஎப்டிஐ), தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சென்னையிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.