×

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 378 மனுக்கள் பெறப்பட்டன

ஈரோடு, செப். 17: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில்கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 378 மனுக்கள் வரப்பெற்றது.இதை கதிரவன் பெற்றுக் கொண்டு அந்த மனுக்களை பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களின் முகாம் மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட உயர் அலுவலர்களின் மனுநீதிநாள் முகாம் மனுக்கள், மக்களை தேடி வருவாய்த்துறை அம்மா திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் குறித்தும், அந்த மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் கலெக்டர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்.முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகைக்கான ஆணையினையும், ஒரு பயனாளிக்கு 10 ஆயிரத்து 802 ரூபாய் மதிப்பில் தொகுப்பு நிதி வங்கி கடன் வட்டி மானியத்திற்கான ஆணையும் வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளி ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் வேண்டி மனு அளித்தார். அந்த மனுவை பரிசீலித்து உடனடியாக மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் உட்பட அனைத்து துறை அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

Tags : meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...