×

அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் கலெக்டர் எச்சரிக்கை

அரியலூர், செப். 17: அரியலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பேனர் வைத்தால் ரூ.5 ஆயிரம் அபராதம், ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று கலெக்டர் வினய் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் விளம்பர பேனர், தட்டிகள் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் வினய் தலைமை வகித்து பேசுகையில், விளம்பர பதாகைகள் மற்றும் தட்டிகள் வைப்பது குறித்த- 2011ன் விதிகளின்படியும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படியும் தனியார், அரசு நிலம், பொது மற்றும் தனியார் கட்டிடங்கள், சாலைகள், மைதானங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பொதுமக்கள் மற்றும் சாலை பயன்பாட்டாளர்கள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விளம்பர, வரவேற்பு பதாகைகள் மற்றும் தட்டிகள் வைப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்தால் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாக அமையும். மீறி வைப்பவர்கள் மீது காவல்துறை மூலம் குற்ற வழக்கு நடவடிக்கையுடன் ரூ.5 ஆயிரம் அபராதம், ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்றார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், மாவட்ட ஆட்சியரக சிரஸ்தார் (பொது) முத்துகிருஷ்ணன், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...