×

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல் பெற்றோர் மீது கலெக்டரிடம் புகார்

நாகை, செப்.17: திருவாரூர் மாவட்டம் வேலங்குடி கீழப்படுகை மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாஸ்கரன் (25). ஈரோடு மாவட்டம் வளையல்கார வீதியை சேர்ந்தவர் யாஸ்மின் (19). இவர்கள் இருவரும் நேற்று நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் சுரேஷ்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது பாஸ்கரன் கூறியதாவது: நான் திருவாரூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். தொழில் சம்பந்தமாக ஈரோடு செல்லும் போது யாஸ்மின் உடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் இரண்டு பேரும் கடந்த 4 மாதங்களாக காதலித்து வந்தோம். இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்களது காதலுக்கு இரண்டு வீடுகளில் இருந்தும் எதிர்ப்பு வந்தது.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி யாஸ்மினை வீட்டை விட்டு அழைத்து வந்தேன். மறுநாள் 12ம் தேதி நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் இந்து மத முறைப்படி மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டோம். இதற்கிடையே யாஸ்மின் வீட்டில் ஈரோடு போலீஸ் ஸ்டேசனில் என் மீது புகார் தெரிவித்துள்ளனர். இரு தரப்பினர் வீட்டிலிருந்தும் எங்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. யாருக்கும் தெரியாமல் காரைக்கால் மதகடியில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி வந்தோம். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்று கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மனுவை பெற்ற கலெக்டர் நாகை டவுன் டிஎஸ்பி அலுவலகத்திற்கு மனுவை அனுப்பியுள்ளார். உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் என்றார்.

Tags : Collector ,murder ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...