சேலம், செப்.15: சேலம் கோகுலம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அர்த்தநாரி நிருபர்களிடம் கூறியதாவது: உடல் ஆரோக்கியம் அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். சேலத்தில் அனைத்து மருத்துவ துறைகளிலும், நிபுணர்கள் இருக்கிறார்கள். இவற்றில் முக்கியமான ஒன்று அவசர சிகிச்சை. எங்கள் மருத்துவமனை சார்பில், அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சையில் உள்ள நவீன மேம்பாடு குறித்த சிறப்பு கருத்தரங்கு, இன்று (15ம் தேதி) சேலம் சிஜே பிளாசியோ ஓட்டலில் நடக்கிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடக்கும் இந்த கருத்தரங்கில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டு பல தலைப்புகளில் பேசுகிறார்கள். பக்கவாதம் சிகிச்சையில் உள்ள நவீனம் குறித்து டாக்டர்கள் புனித், மகாதேவன் ஆகியோர் பேசுகிறார்கள்.
அவர்களை தொடர்ந்து இருதயம் பற்றி டாக்டர்கள் நாகூர்மீரான், ஹரிகுமார், இரைப்பை குறித்து டாக்டர்கள் ராஜேஷ், மகேந்திரன், சிறுநீரகம் குறித்து டாக்டர்கள் கார்த்திகேயன், பிரகதீஸ்வரன், மகப்பேறு குறித்து டாக்டர்கள் சந்திரமவுலி, அகிலா ஆகியோர் பேசுகிறார்கள். அவசர சிகிச்சை குறித்து டாக்டர்கள் சுப்பிரமணியன், அகிலா உள்பட பல்வேறு துறைகளை பற்றி டாக்டர்கள் பேசுகின்றனர். இதில், பங்கேற்க 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முன்பதிவு செய்துள்ளனர். பல உயிர்களை காப்பாற்ற இந்த மருத்துவ கருத்தரங்கு உதவும் என நம்புகிறோம். இவ்வாறு டாக்டர் அர்த்தநாரி கூறினார்.