×

எழுமலை அருகே சீல்நாயக்கன்பட்டியில் தோரணவாயில் பிரச்னைக்கு ஆர்.டி.ஓ பேச்சுவார்த்தை

உசிலம்பட்டி, செப். 15:  எழுமலை அருகே சீல்நாயக்கன்பட்டியில் தோரணவாயில் அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக ஆர்.டி.ஓ அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது சீல்நாயக்கன்பட்டி. இந்த கிராமத்தின் சாலையில் தோரணவாயில் அமைப்பதில் இரு பிரிவினர்களிடையே பிரச்சனை ஏற்பட்டது. அதில் ஒரு பிரிவினர் தோரணவாயில் அமைக்க கூடாது என்றும், மற்றொரு பிரிவினர் தோரணவாயில் அமைப்போம் என்றும் இரு பிரிவினர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரு பிரிவினர்களையும் பேச்சுவார்த்தைக்கு உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. அழைப்பு விட்டிருந்தார். அதில் நேற்று ஆர்.டி.ஓ.பானுகோபன் தலைமையில், பேரையூர் தாசில்தார் ஆனந்தி, எழுமலை இன்ஸ்பெக்டர் தினகரன் ஆகியோர் முன்னிலையில் இரு பிரிவினர்களிடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதில் தோரணவாயில் அமைப்பவர்கள் முறையாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் அனுமதி பெற்றால் கட்டிக்கொள்ளலாம். அதுவரை ஆட்சியர் அனுமதியின்றி தோரணவாயில் அமைக்கும் வேலையை செய்யக்கூடாது. மீறி செய்பவர்கள் மீது சட்டப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இரு தரப்பினர்களும் இது சம்மந்தமாக எந்தவொரு பிரச்சனைகளும் செய்யக்கூடாது. மீறி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ. பானுகோபன் கூறினார்.

Tags : RTO ,Ezhumalai ,Seelnayakanpatti ,
× RELATED அனைத்து பஸ்கள் நின்று செல்ல ஆர்டிஓ உத்தரவு