×

இரவோடு இரவாக அகற்றப்பட்ட அரசியல் கட்சிகளின் பேனர்கள்

பொள்ளாச்சி, செப். 15:  பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பிளக்ஸ் போர்டுகள் மற்றும் பேனர்களின் ஆக்கிரமிப்பு அண்மை காலமாக அதிகரித்தது. குறிப்பாக கோவை ரோடு, மத்திய பஸ்நிலையம், தேர்நிலை, பாலக்காடு ரோடு உள்பட பல இடங்களில் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் தனியார் பிளக்ஸ் போர்டுகள் அதிகளவில் இருந்துள்ளது. நகரில் உள்ள முக்கிய இடங்களில் ரோட்டை மறைக்கும் அளவிற்கு ஆங்காங்கே வைக்கப்படும்  பிளக்ஸ் போர்டுகளால் இடையூறு அதிகளவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 இந்நிலையில், சென்னையில் பிளக்ஸ் போர்டு விழுந்து பெண் இறந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிளக்ஸ் போர்டு அகற்றப்பட்டு வருகிறது.  பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில்  இரவேடு இரவாக, அந்தந்த அரசியல் கட்சியினர் வைத்த பிளக்ஸ் போர்டுகளை தங்களாவே முன்வந்து அப்புறப்படுத்தினர். நேற்று காலையில், கோவைரோடு, பஸ் நிலைய பகுதி, தேர்நிலை உடுமலைரோடு, கோட்டூர் பகுதிகளில் அரசியல் கட்சியினரின் பிளக்ஸ்போர்டுகள் இல்லை. ஆனால் தனியார் மூலம் வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் அப்புறப்படுத்தாமல் இருந்தது. அதனை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி, சரக்கு வாகனத்தில் எடுத்து சென்றனர். வரும் காலங்களில், நகர் பகுதியில் இடையூறாக பிளக்ஸ்போர்டுகளை வைப்பதை தடுக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : parties ,
× RELATED அதிமுக, பா.ஜ.க. இரு கட்சிகளும்...