திருச்செங்கோடு, செப்.11: திருச்செங்கோட்டில் உள்ள ரேஷன் கடையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொருட்கள் முறையாக விநியோகிக்கப் படுகிறதா என கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலர் தயானந்த கட்டாரியா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். திருச்செங்கோட்டில் டிசிஎம்எஸ் சார்பில் இயங்கும் ரேஷன் கடைகளில், அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது, பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகிறதா, பொருட்கள் இருப்பு சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தார். மேலும், பொருட்கள் வாங்க வந்த பெண்களிடம், முறையாக ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறதா, பொருட்கள் தரமாக உள்ளதா என விசாரித்தார். தொடர்ந்து திருச்செங்கோடு அடுத்த விட்டம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை சங்க ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, கலெக்டர் ஆசியா மரியம், டிசிஎம்எஸ் மேலாண் இயக்குனர் ரவிக்குமார் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் தயானந்த் கட்டாரியா நேரில் ஆய்வு செய்தார். கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் வடகரையாத்தூர் ஏரியில் ₹5 லட்சத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டு, பணிகள் குறித்து கலெக்டர் ஆசியா மரியத்திடம் கேட்டறிந்தார். பின்னர், கு.அய்யம்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு சென்று, பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவு தரமாக உள்ளதா என கேட்டறிந்தார். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கலெக்டர் ஆசியாமரியம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.