×

ராசிபுரம் அரசு கல்லூரியில் தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு

ராசிபுரம், செப்.11: ராசிபுரம் அடுத்த ஆண்டகலூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில்,  மாவட்ட மனநல திட்டத்தின் சார்பில்,  உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் மணிமேகலை முன்னிலை வகித்தார். அரசு தலைமை மனநல மருத்துவர் குணமணி, மனநல மருத்துவர் ஜெயசந்திரன், மனநல ஆலோசகர் ரமேஷ், உளவியாளர் அர்ச்சனா, பேராசிரியர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மனநல மருத்துவர் குணமணி பேசுகையில், ‘தற்கொலை எண்ணங்கள் கட்டுப்படக் கூடியதே என்ற உண்மை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சூழ்நிலை பாதிப்பு, சுயமரியாதை ஆகியவை தற்கொலை முயற்சியை தோற்றுவிக்கிறது. தக்க ஆலோசனை இல்லாத காரணத்தினால், தற்கொலை அதிகம் நடைபெறுகிறது. ஒரு பிரச்னை இருந்தால், அதற்கு தீர்வும் உண்டு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். தற்கொலை எண்ணங்களும், முயற்சியும் மனநோயின் அறிகுறிகளே. மனதில் தன்னம்பிக்கை எண்ணம் வளர்ந்தால், தற்கொலை எண்ணம் ஒருபோதும் வராது,’ என்றார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Government College ,Suicide Prevention Day ,Rasipuram ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்