×

தேன்கனிக்கோட்டை அருகே கம்பி வலை விரித்து வேட்டை

தேன்கனிக்கோட்டை, செப்.11: தேன்கனிக்கோட்டை அருகே கம்பி வலை விரித்து வனவிலங்குகளை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் பிடித்து, ₹50 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார், வனவர் கதிரவன் மற்றும் வனகுழுவினர், நேற்று முன்தினம் குள்ளட்டி காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வனத்துறையினரை பார்த்ததும், இருவர் கம்பி வலையுடன் தப்பி ஓட முயன்றனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் குள்ளட்டி கிராமத்தைச் சேர்ந்த குந்துக்கோட்டப்பா மகன் மயிலேரி(23), மல்லப்பா மகன் மாரப்பா(26) என தெரியவந்தது. மேலும், கம்பி வலை வைத்து வனவிலங்குகளை வேட்டையாட காட்டுப்பகுதிக்குள் வந்ததாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அவர்களிடமிருந்த கம்பி வலையை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகள் வேட்டையாடிய குற்றத்திற்காக தலா ₹25 ஆயிரம் வீதம், இருவரிடமிருந்து ₹50 ஆயிரம் அபராதம் வசூலித்து எச்சரித்து விடுவித்தனர்.

Tags : hunting ,Thenkanikottai ,
× RELATED முயல் வேட்டை வழக்கில் மேலும் 2 பேர் கைது