கடத்தூர், செப்.11: கடத்தூர் அருகே தாளநத்தம் ஊராட்சி பகுதியில், தூய்மை காவலர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சி நிர்வாகம் சார்பில், தூய்மை காவலர் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, துணி பை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உள்ள பொருட்கள் மற்றும் அவற்றை கையாளும் முறைகள் குறித்து, மொரப்பூர் வட்டார தணிக்கை அலுவலர் சிவக்குமார் விளக்கினார். தொடர்ந்து குப்பை கழிவுகளை கையாளும் முறைகள், அவற்றை மறுசுழற்சி செய்யும் முறைகள், பொதுமக்களிடம் எவ்வாறு குப்பைகளை வாங்க வேண்டும் என்பது குறித்து பேசினார். நிகழ்ச்சியில், ஊராட்சி செயலர் ஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.