×

உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு மின்வாரிய அலுவலகம் முன் மக்கள் போராட்டம்

ஜெயங்கொண்டம், செப். 11: ஆமணக்கம்தோண்டியில் உயர் மின்னழுத்த கோபுரம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயங்கொண்டம் மின்வாரிய அலவலகம் முன் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆமணக்கந்தோண்டி கிராமம் வடக்கு தெருவில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த பகுதியில் வயல்வெளிக்கு விவசாயம் செய்ய நிலத்துக்கு மோட்டார் இயக்க வேண்டி மின்சாரம் தேவைப்படுவதால் முன்னாள் ராணுவ வீரர்கள், ஊனமுற்றோர், விதவைகள் சிறப்பு முன்னுரிமை திட்டத்தின்கீழ் மின்சாரம் வழங்க கடந்த 28ம் தேதி தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரு பொதுப்பாதையில் மின்கம்பங்கள் நடுவதற்கு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உயர் மின்னழுத்தம் கம்பிகள் தெருக்களின் வழியாக சென்றால் உயிர்பலி ஏற்படும். எனவே இந்த பொதுப்பாதை வழியாக மின்கம்பம் அமைக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இப்பகுதியில் ஏற்கனவே உள்ள உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து உயிர்பலி ஏற்பட்டுள்ளதால் இங்கு மின் கம்பங்கள் அமைக்கக்கூடாது என மின்சார வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மின்கம்பம் நடுவதற்கு ஆட்கள் சென்றபோது பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஜெயங்கொண்டம் (வடக்கு) மின்சார வாரியத்துக்கு பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சென்று முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் மின்சாரம் கொண்டு செல்ல மாட்டோம் என உறுதியளித்தால் மட்டுமே இங்கிருந்து செல்வோம் என தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சிதம்பரம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உதவி செயற்பொறியாளர் சாமிதுரை, உதவி மின்பொறியாளர்கள் ரம்யா, சிலம்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி மின்சாரம் கொண்டு செல்லும் இடத்தை பார்வையிட்டு சுமூக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் மின்சார அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Anti-Electricity Office ,tower ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...