கடையம், செப். 11: கடையம் ஒன்றியத்தில் திடக்கழிவு மேலாண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடையம் ஒன்றியம் ரவணசமுத்திரம் ஊராட்சிப் பகுதியில் ராமநதி ஆற்றங்கரையில் செயல்படுத்தப்பட்டுள்ள திடக் கழிவு மேலாண் திட்டப் பணிகளை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார். கழிவுநீர் கால்வாய் மூலம் வரும் திடக்கழிவு நேரடியாக நதியில் கலக்காமல் சுத்திகரிக்கப்பட்டு கலப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள உறிஞ்சு குழிகளை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து, சேர்வைகாரன்பட்டி ஊராட்சி கட்டேறிபட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடந்துவரும் தடுப்பணை கட்டும் பணி, வெங்காடம்பட்டி ஊராட்சியில் தமிழக முதல்வர் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் சிறுபாசனக் குளங்களில் நடந்துவரும் மராமத்துப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் அனைவர் வீடுகளிலும் கழிப்பறைகள் அமைக்க வேண்டும். வீடுகளில் இது போன்று திடக் கழிவு மேலாண்மை அமைப்புகளை அமைத்தால் வெளியாகும் கழிவு நீர் இன்னும் சுத்தமாக ஆறு போன்ற நீர்நிலைகளில் சேரும் என்றார். மேலும் புதிதாகக் கட்டப்படும் வீடுகளில் கழிப்பறைகள் அமைத்தால்தான் வீடு கட்டுவதற்கான திட்ட ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் பழநி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) நியூட்டன், கடையம் பிடிஓக்கள் முருகையா, பழனிவேல், மண்டல துணை பிடிஓக்கள் மாரியப்பன், தங்கராஜ், சுப்புலட்சுமி, பிரபாகரன், ஒன்றிய உதவிப் பொறியாளர்கள் ஜான்சுகிர்தராஜ், சுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர்கள் மாரியப்பன், கதிரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.