×

மாமூல் தர மறுத்தவர் வெட்டிக்கொலை பிரபல ரவுடிக்கு ஆயுள் சிறை

சென்னை: மாமூல் தர மறுத்தவரை வெட்டிக்கென்ற வழக்கில் பிரபல ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குரோம்பேட்டை, சென்ட்ரல் நகர், நவமணி தெருவை சேர்ந்தவர் எத்திராஜ் (30). இவரது அண்ணன் ரமேஷ்பாபு (35). இவர்கள் இருவரும் அதே பகுதியில் கேபிள் டிவி அலுவலகம் நடத்தி வந்தனர். இந்நிலையில், குரோம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் (47) என்பவர், கடந்த 10.10.2002 அன்று இவர்களிடம் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால், இவர்கள் மாமூல் தர மறுத்துள்ளனர். இதனால், ஸ்ரீதர் மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுபற்றி எத்திராஜ், ரமேஷ்பாபு ஆகியோர் குரோம்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார், ஸ்ரீதரை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால், ஆத்திரமடைந்த ஸ்ரீதர், அன்று இரவே தனது கூட்டாளிகள்  அமுல்ராஜ், சவுந்தர், முருகன், சீனிவாசன் ஆகியோருடன் சென்று, கேபிள் அலுவலகத்தில் இருந்த எத்திராஜ், ரமேஷ்பாபு ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே எத்திராஜ் இறந்துவிட்டார். ரமேஷ்பாபு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, ஸ்ரீதர் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை காலத்தில் அமுல்ராஜ், சவுந்தர், முருகன், சீனிவாசன் ஆகியோர் இறந்தனர். இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி ராமநாதன், ‘‘குற்றம் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், ஸ்ரீதருக்கு 3 பிரிவுகளின் கீழ் தண்டனை விதிக்கப்படுகிறது. ஒரு பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், மற்ற 2 பிரவின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...