×

சோழவரத்தில் புதர் மண்டிய ஏரி கால்வாய்

ஊத்துக்கோட்டை, செப். 11: தாமரைப்பாக்கத்தில் இருந்து சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பெரியபாளையம்  அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் குசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில்  தடுப்பணை கட்டப்பட்டது.   மழை காலங்களில் பூண்டி ஏரி நிரம்பினால், உபரி நீர்  தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும். பின்னர், அங்குள்ள கால்வாய் வழியாக சோழவரம்  ஏரிக்கு திறக்கப்பட்டு, அங்கிருந்து புழல் ஏரிக்கு  அனுப்பப்படும். அது சென்னை மக்களுக்கு  குடிநீர் தேவைக்காக விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது வறட்சி நிலவுவதால் தாமரைப்பாக்கத்தில் இருந்து சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் செடிகொடிகள் வளர்ந்து கால்வாய் முழுவதும்  புதர்கள் மண்டிக்காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அந்த கால்வாயில் அக்கம் பக்கம் உள்ள வீடு, கடை, ஓட்டல்களிலிருந்து வெளியேறும்  கழிவுநீரும் கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது.

இது குறித்து அப்பகுதி  விவசாயிகள்  கூறுகையில், ‘தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில்  ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில்  மழை நீர் தேக்கி வைக்கப்பட்டதால் இங்குள்ள விவசாயிகள் பயன் பெற்றனர். மேலும், சென்னை மக்களின் தாகம் தீர்ப்பதற்காக இந்த அணைக்கட்டில் இருந்து சோழவரம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படும். பின்னர், அது புழல் ஏரிக்கு அனுப்பப்படும். தற்போது, தாமரைப்பாக்கத்தில் இருந்து சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாய் வறட்சி காரணமாக தூர்ந்துள்ளது. செடி கொடிகள் படர்ந்து புதர் மண்டியுள்ளது. அதில் சிலர் இறைச்சி மற்றும் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி தொழிற்சாலை மற்றும் ஓட்டல்களில் சேரும் கழிவு நீரை டேங்கர் லாரிகளில் ஏற்றி வந்து கால்வாயில் விடுகின்றனர். இந்த கழிவு நீர் குப்பையுடன் சேர்ந்து தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அவ்வப்போது பெய்து வரும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்துள்ளது.

இதில் உற்பத்தியாகும் கொசு மக்களை கடிக்கிறது. இதனால் பல்வேறு நோய்களால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் இருந்து சோழவரத்திற்கு செல்லும் ஏரிக்கால்வாயை சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் தூர்வாரி கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி கால்வாயில் கழிவு பொருட்கள், கழிவு நீர், இறைச்சி கழிவுகள் கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து  கால்வாய் ஓரத்தில் உள்ள விவசாயிகள்  பயனடைவார்கள்’ என்றனர்.

Tags : Bush Canal Lake Canal ,Cholavaram ,
× RELATED நிலத்தகராறில் விபரீதம் தீக்குளித்து...