×

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் பணிகள் முடிந்தும் பயன்பாட்டிற்கு வராத கிணறு

திருக்கழுக்குன்றம், செப்.11: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில், பணிகள் முடிந்தும் பயன்பாட்டுக்கு வரதா கிணறுகளால் பொதுமக்கள் குடிநீருக்காக கடும் அவதியடைந்துள்ளனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த ஏப்ரல், மே மாதத்தில், எந்த ஆண்டும் இல்லாத கோடை வெயில் வாட்டி எடுத்ததாலும், கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதாலும் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. இதையொட்டி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  பேரூராட்சி பகுதியில் 3 இடங்களில் தலா 15 லட்சம் வீதம், 3 கிணறுகள் தோண்டப்பட்டன. ஆனால், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இதுவரை கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வறட்சி காலத்தில் மக்களின் தாகம் தீர்க்கும் என துவங்கப்பட்ட பணி, தற்போது முடிந்தும் மக்களுக்கு பயன்படாமல் வீணாக கிடக்கிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் பஞ்சத்தை தீர்த்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்க அவசர பணியாக கிணறு தோண்டப்பட்டது. ஆனால், கிணற்றுக்கு பம்ப் செட் ரூம் கட்டாமலும், மின் இணைப்பு வழங்காமலும் உள்ளதால் பயன்பாடற்று கிடக்கிறது என்றனர்.

Tags : well ,
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...